3,976 ஏக்கரில் சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு


3,976 ஏக்கரில் சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு
x

வேலூர் மாவட்டத்தில் 3,976 ஏக்கரில் சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலூர்

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சொட்டுநீர் பாசனம்

குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பில் பயிர் உற்பத்தி செய்ய சொட்டுநீர் பாசன திட்டம் வழிவகை செய்கிறது. இந்த திட்டத்தின் மூலம் தண்ணீர் பயன்பாட்டு திறன் 40 முதல் 60 சதவீதம் வரையும், மகசூல் 30 முதல் 40 சதவீதம் வரையும் அதிகரிக்கிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் உரங்களையும் பாசன நீர்வழியாக செடியின் வேர்பகுதிக்கு நேரடியாக செலுத்துவதால் உர பயன்பாடு 40 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இதனால் பாசனநீர் சிக்கனமாக பயன்படுவதோடு உரங்களும் வீணாகாமல் தேவைக்கு ஏற்றார்போல் பயன்படுத்தப்படுகிறது. களைகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுவதால் தொழிலாளர்களின் தேவை குறைகிறது.

சொட்டுநீர் பாசன திட்டத்தில் சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம், மழைத்தூவான் பாசனம் போன்ற வெவ்வேறு வகையான பாசன அமைப்புகள் உள்ளன. இவை அனைத்துக்கும் ஒரே மாதிரியான மானிய முறையே பின்பற்றப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

3,976 ஏக்கர் இலக்கு

இந்த திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பட்டாநகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 2 பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம், நில வரைபடம், அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து பயன்பெறலாம்.

வேலூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டில் 3,976 ஏக்கரில் சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் செய்ய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது MIMIS இணையதளத்தின் மூலமாக நேரடியாக பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுக வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story