கரூரில் 3-வது கட்டமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு..!


கரூரில் 3-வது கட்டமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு..!
x

கரூரில் 3-வது கட்டமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.

கரூர்,

தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மீது வரி ஏய்ப்பு புகார்கள் வருமான வரித்துறைக்கு வந்தது. இதையடுத்து கடந்த மே 26-ந்தேதி அவர்களுடைய வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 நாட்கள் சோதனை நடத்தினர். அப்போது சில முக்கிய ஆவணங்களையும் எடுத்து சென்றனர்.

இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர்களான சக்தி மெஸ் பங்குதாரர்கள் கார்த்தி, ரமேஷ் வீடு, அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீடு, வையாபுரி நகரில் உள்ள ஆடிட்டர் அலுவலகம், கரூர் ஜவகர்பஜாரில் உள்ள நகைக்கடை உள்பட 7 இடங்களில் 2 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கரூரில் நேற்று 3-வது முறையாக வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்டனர். இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளரான ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் சுப்பிரமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனையொட்டி 2 கார்களில் வந்த 5-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 8.45 மணி முதல் கொங்கு மெஸ் சுப்பிரமணி வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே சோதனை நடத்தி சீல் வைக்கப்பட்ட இடங்களில் சீல் அகற்றப்பட்டு மீண்டு்ம் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், கரூரில் 3-வது கட்டமாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 12 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story