தமிழக மீனவர்களிடம் ரூ.4 லட்சம் வலைகள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்


தமிழக மீனவர்களிடம் ரூ.4 லட்சம் வலைகள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
x

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது தமிழக மீனவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தை சேர்ந்த ஜெயபால்(வயது 30) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே ஊரை சேர்ந்த மகாலிங்கம்(60), ராகுல்(20), லோகேஷ்(29) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு புஷ்பவனத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.இதேபோல் புஷ்பவனம் பகுதியை சேர்ந்த முனீஸ்வரன்(40) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதேபகுதியை சேர்ந்த முகுந்தன்(20), வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த ரவிக்குமார்(28), காளியப்பன்(30) ஆகியோரும் மீன்பிடிக்க சென்றனர்.

ரூ.4 லட்சம் வலைகள் பறிப்பு

இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 பைபர் படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர், மீனவர்களின் படகில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 900 கிலோ மீன்பிடி வலைகளை பறித்து சென்றனர்.

இதை தொடர்ந்து மீனவர்கள் நேற்று காலை கரைக்கு திரும்பி வந்தனர். பின்னர் அவர்கள் இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story