ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி


ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:46 PM GMT)

திட்டக்குடி அருகே கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.

கடலூர்

ராமநத்தம்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 35). இவருடைய மனைவி கவுசல்யா(29). இந்த தம்பதியரின் மகள் சாரா (1½). மதிவாணன் தஞ்சாவூரில் அரிசி ஆலை நடத்தி வந்தார். இதற்காக அவர் குடும்பத்துடன் தஞ்சாவூரில் தங்கி இருந்தார். மதிவாணனின் மாமனார் துரைராஜ் (52), மாமியார் தவமணி (46).

இவர்கள் அனைவரும் சென்னையில் நேற்று முன்தினம் காலையில் நடைபெற்ற துரைராஜியின் அண்ணன் மகள் திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர். அங்கு திருமணம் முடிந்ததும் அதே காரில் நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூருக்கு புறப்பட்டனர்.

கார் மீது மோதல்

இதேபோல் விழுப்புரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று திருச்சி நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சை திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள கல்லக்குடியை சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் ஓட்டினார்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதிவாணனின் கார் முன்னால் செல்ல, அரசு பஸ் பின்தொடர்ந்து வந்தது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே ஆவட்டியில் நேற்று காலை 5.30 மணிக்கு வந்தபோது கார் மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. பஸ்சின் இடதுபுறத்தில் கார் சிக்கியதால் 100 மீட்டா் தூரத்துக்கு காரை இழுத்து சென்றதோடு, அங்கு சாலையோரத்தில் இருந்த வேப்ப மரத்தின் மீது மோதி நின்றது.

4 பேர் உடல் நசுங்கி பலி

இந்த கோர விபத்தில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது. மேலும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி மதிவாணன், கவுசல்யா, சாரா, தவமணி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த துரைராஜ், உயிருக்காக போராடிக்கொண்டிருந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த துரைராஜை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரணம் என்ன?

இதனிடையே விபத்தில் சிக்கிய 4 பேரின் உடலை மீட்க முடியவில்லை. எனவே வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து 4 பேரின் உடலை மீட்டனர். இதையடுத்து 4 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், விழுப்புரம் தடயவியல் நிபுணர் ராஜீவ் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story