நகை- பணம் திருடிய கார் டிரைவர் உள்பட 4 பேர் கைது


நகை- பணம் திருடிய கார் டிரைவர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 24 July 2023 7:30 PM GMT (Updated: 24 July 2023 7:30 PM GMT)

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று வந்த தனியார் உரிமையாளரிடம் நகை, பணம் திருடிய கார் டிைரவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 28). இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கார் டிரைவராக கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியை சேர்ந்த மனோஜ் (27) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மராஜ் கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா வந்து விட்டு ஊருக்கு புறப்பட்டார். காரை மனோஜ் ஓட்டினார். அப்போது வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையில் ஊத்து என்னுமிடத்தில் மனோஜின் நண்பர் மணிகண்டன் மற்றும் தேனியை சேர்ந்த சண்முகசுந்தரம் (33), ரமேஷ், சிவா, முத்துச்செல்வம், பிரேம்குமார், ஆண்டிப்பட்டியை ேசர்ந்த மதன் (46) ஆகியோர் ஒரு காரில் வந்து நின்று கொண்டிருந்தனர். உடனே மனோஜ் காரை நிறுத்தி இறங்கி சென்று அவர்களிடம் பேசினார். தர்மராஜூம் இறங்கி சென்று பேசியதாக தெரிகிறது. அதன்பின்பு தர்மராஜ் பேரையூர் புறப்பட்டு சென்றார். அப்போது காரில் இருந்த ரூ.2 லட்சம், 1½ பவுன் நகைகள் திருடு போய் இருப்பதை பார்த்து தர்மராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தாண்டிக்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் டிரைவர் மனோஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்தையும், நகைகளையும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து மனோஜ், மணிகண்டன், சண்முகசுந்தரம், மதன் ஆகியோரை போலீசார் கைது செய்து, நகைகளை மீட்டனர். தலைமறைவாக உள்ள ரமேஷ், சிவா, முத்துச்செல்வம், பிரேம்குமார் ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story