வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு 'சீல்'


வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 17 Oct 2023 5:30 AM IST (Updated: 17 Oct 2023 5:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையத்தில் வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 164 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மாதந்தோறும் மாநகராட்சிக்கு வாடகை செலுத்த வேண்டும். இந்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு வாடகை செலுத்தப்படாமல் இருப்பது தெரியவந்தது. அந்த வகையில் ரூ.2¼ கோடி வாடகை பாக்கி இருந்தது. இதையடுத்து வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி 'சீல்' வைக்கும்படி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் வாடகை செலுத்தாத கடைகளை கண்டறிந்து நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த 14-ந்தேதி வாடகை செலுத்தப்படாத 10 கடைகளை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர். அதில் 4 கடைகளுக்கு உடனடியாக வாடகை செலுத்தப்பட்டது. இதற்கிடையே நேற்று உதவி வருவாய் அலுவலர் விஜயராகவன் தலைமையிலான அதிகாரிகள் பஸ்நிலையத்துக்கு வந்தனர்.

பின்னர் வாடகை செலுத்தப்படாத கடைகளை 'சீல்' வைக்கப்போவதாக அதிகாரிகள் எச்சரித்தனர். இதனையடுத்து ஒருசில கடைக்காரர்கள் தங்களுடைய வாடகை பாக்கியை செலுத்தினர். அந்த வகையில் உடனடியாக ரூ.15 லட்சம் வசூலானது. இதற்கிடையே வாடகை செலுத்தப்படாத 4 கடைகளை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர். இதேபோல் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளை கண்டறிந்து 'சீல்' வைக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story