மதுரை ரிங்ரோட்டில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல் - 5 பேர் காயம்


மதுரை ரிங்ரோட்டில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக்கொண்டன. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

மதுரை


மதுரை ரிங்ரோட்டில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக்கொண்டன. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

ஆம்னி பஸ் மோதல்

சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று காலை சரக்கு வாகனம் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த வாகனம் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பாண்டிகோவில் ரிங்ரோடு பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார், அந்த சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த சமயத்தில், சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்த ஆம்னி பஸ் ஒன்று, போக்குவரத்து காவல்துறையினர் நிற்பதை கவனிக்காமல் வேகமாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட கிரேன் வாகனத்தின் மீது மோத முயன்றது. இதனை கவனித்த ஆம்னி பஸ் டிரைவர், உடனடியாக பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால், அந்த பஸ்சும் கட்டுப்பாட்டை இழந்து கிரேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து பின்னால் வந்த மற்றொரு சரக்கு வாகனமும் அந்த இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

5 பேர் காயம்

தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் சாலையில் மோதி கொண்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில், பஸ்சில் பயணித்த 3 பயணிகள், டிரைவர் உள்ளிட்ட 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து போக்குவரத்து காவல்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலமாக விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டனர். இந்த விபத்து குறித்து மாநகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story