ரூ.43 கோடி கல்விக்கடன் இலக்கை எட்ட நடவடிக்கை


ரூ.43 கோடி கல்விக்கடன் இலக்கை எட்ட நடவடிக்கை
x

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.43 கோடி கல்விக்கடன் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் ரூ.43 கோடி கல்விக்கடன் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.

கல்விக்கடன்

விருதுநகரில் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:-

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மத்திய அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு குழுவினால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி, துணைத் தலைவர் தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், அசோகன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் ரூ. 43 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை ரூ. 9 கோடியே 5 லட்சம் மட்டுமே கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மத்திய அரசு கல்வி கடனில் கவனம் செலுத்தாததை காட்டுகிறது.

குழந்தை தொழிலாளர்

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மாவட்டத்தில் ரூ. 120 கோடி வரை கல்விக்கடன் வழங்கப்பட்டது. ரூ.43 கோடி கல்விக்கடன் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தினை மத்திய அரசு நிறுத்திவிட்ட நிலையில் தமிழக அரசு திட்டத்தினை செயல்படுத்த குழு அமைத்து அதற்கு தேவையான நிதியினை நிதியமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

100 நாள் வேலை திட்டத்தில் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக விளங்கும் நிலையில் விவசாய காலம் தவிர பிற நாட்களில் இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களுக்கு எதிரான ஆன்லைன் ரம்மிதடை மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது மக்கள் நலனுக்கு எதிரானது. இந்த விஷயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செயல்பாடு தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது. எனவே அந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story