ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு

ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண் ஊழியர்

ஈரோடு அருகே உள்ள கதிரம்பட்டி நஞ்சனாபுரம் ஆர்.கே.கார்டன் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இறந்துவிட்டார். இவருடைய மனைவி கவிதா (வயது 45). தனியார் பள்ளிக்கூடத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகள் ஓவியா. இவர் திருமணமாகி கோவையில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.

கடந்த 25-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு, கோவையில் உள்ள தனது மகளை பார்க்க கவிதா சென்றார். பின்னர் நேற்று மாலை கோவையில் இருந்து ஈரோட்டுக்கு வந்தார்.

43 பவுன் நகை கொள்ளை

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கவிதா வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

அப்போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டு இருந்த 43 பவுன் நகைகளை காணவில்லை. நகையை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கவிதா இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story