4,308 பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்


4,308 பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்
x

4,308 பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்

தஞ்சாவூர்

மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும் என்று, தஞ்சையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

அமைச்சர் ஆய்வு

தஞ்சை மாவட்டத்தில் 1,458 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை முனிசிபல்காலனியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 1,458 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 93.10 சதவீதம் பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 87.10 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனா்.

வீடுகளில் தனிமை

தமிழகத்தை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 94.68 சதவீதம் பேரும், 2-ம் தவணை தடுப்பூசி 85.47 சதவீதம் பேரும் போட்டுள்ளனர். தமிழக அளவில் போடப்பட்ட 2-ம் கட்ட தடுப்பூசி சதவீதத்தை காட்டிலும் தஞ்சை மாவட்டத்தில் அதிகஅளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மீதி உள்ள 5 சதவீதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் உயிர் இழப்பை ஏற்படுத்தும் அளவில் இல்லை.

பாதிப்பு இல்லை

தமிழகத்தில் தடுப்பூசி காரணமாக மக்களிடையே 88 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 11 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 194 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

உலகில் பல்வேறு நாடுகளில் பிஏ4, பிஏ5 என உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக. தற்போது 5 சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை வருவதால் தற்போது ஊரடங்கு தேவையில்லை.

காலரா

தமிழகத்தில் விரைவில் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும். மருத்தவத்துறையில் சுகாதார செவிலியர்கள், களப்பணியாளர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்து 308 காலி பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) நமச்சிவாயம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story