இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்த 5 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்


இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்த 5 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்
x

இலங்கையில் இருந்து மண்டபத்திற்கு படகு மூலம் கடத்தி வந்த 5 கிலோ தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை தேடி வருகின்றனர்.

ராமேசுவரம்,

இலங்கையில் இருந்து ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக தங்கக்கட்டிகள் கடத்தல் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகள், ஒரு வீட்டில் பதுக்கி வைத்து இருந்த தங்கக்கட்டிகள் என மொத்தம் 33 கிலோ தங்கம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு மற்றும் இந்திய கடலோர காவல்படையால் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து மேலும் ஒரு சம்பவமாக, தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள், அதிவேக ரோந்து படகில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது, மண்டபம் அருகே நல்லதண்ணீர் தீவு பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த பதிவு எண் இல்லாத ஒரு படகை நிறுத்த முயன்றனர்.

தப்பி ஓட்டம்

சுங்கத்துறையினரை கண்டதும் அந்த படகில் இருந்த 3 பேரும் படகை வேகமாக செலுத்தினர். அந்தப்படகை அதிகாரிகள், விரட்டிப் பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த படகில் இருந்த 3 பேரும், உச்சிப்புளி அருகே உள்ள நொச்சியூரணி மற்றும் புதுமடத்திற்கு இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் படகை ஏற்றி நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து அந்த படகில் இருந்த 5 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். மேலும் தப்பியோடிய 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story