பெண் வியாபாரியிடம் 5½ பவுன் சங்கிலி அபேஸ்


பெண் வியாபாரியிடம் 5½ பவுன் சங்கிலி அபேஸ்
x
தினத்தந்தி 20 Oct 2022 6:45 PM GMT (Updated: 20 Oct 2022 6:46 PM GMT)

சின்னசேலத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலியை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

பெண் வியாபாரி

சின்னசேலம், வண்டிமேட்டு தெருவை சேர்ந்தவர் கோவைக்கண்ணி(வயது 61). விஜயபுரம் செல்வ முருகன் கோவில் அருகே காய்கறி கடை நடத்தி வரும் இவர் சம்பவத்தன்று சேலம் மாவட்டம் ஆறகளூரில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனியார் பஸ்சில் மீண்டும் சின்னசேலம் நோக்கி வந்துகொண்டிருந்தார்.

சின்னசேலம் பஸ் நிலையத்தில் வந்து இறங்கியதும் கழுத்தில் கிடந்த 5½ பவுன் சங்கிலியை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தான் பயணம் செய்த தனியார் பஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் தங்க சங்கிலியை காணவில்லை.

போலீசார் விசாரணை

பஸ்சில் பயணம் செய்தபோது யாரோ மர்ம நபர் கோவைக்கண்ணியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை அபேஸ் செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மாயமான தங்க சங்கிலியின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து கோவைக்கண்ணி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகிறார்கள். இதுதவிர சின்னசேலம் பகுதியில் பஸ் நிலையம், வங்கி மற்றும் ஓடும் பஸ்களில் பெண்களை குறி வைத்து திருட்டு, சங்கிலி பறிப்பு போன்ற சம்பவம் நிகழ்ந்து வருவது தொடர்கதையாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே போலீசார் தனிப்படை அமைத்து பெண்களிடம் கைவரிசை காட்டும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story