சென்னையில் பிரபல ரவுடி தலையில் கல்லை போட்டுக் கொன்ற சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது


சென்னையில் பிரபல ரவுடி தலையில் கல்லை போட்டுக் கொன்ற சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது
x

சென்னையில் பிரபல ரவுடி தலையில் கல்லை போட்டுக் கொன்ற சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி நகர், 6-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது25). ரவுடி. இவர் மீது 3 கொலை வழக்கு, 20-க்கும் மேற்பட்ட வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சண்முகம் தனது கூட்டாளிகளுடன் அதே பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு சென்றார். அப்போது அங்கு 5 வாலிபர்கள் சீட்டு விளையாடிக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் ரவுடி சண்முகம் தரப்பினர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் எதிர் தரப்பினரிடம் ரவுடி சண்முகம் சிக்கிக்கொண்டார். உடனே அவனது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து ரவுடி சண்முகத்தை சரமாரியாக தாக்கிய கும்பல் அவரது தலையில் கல்லை தூக்கி போட்டனர்.இதில் பலத்த காயம் அடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்குள்அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அங்கு ரவுடி சண்முகம் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ரவுடி சண்முகத்தை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து சக்திவேல், இளங்கோ,கரிமுல்லா உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.இவர்களில் 2 பேர் 18 வயதுக்கட்பட்ட சிறுவர்கள் ஆவர். சீட்டு விளையாடிக்கொண்டு இருந்தபோது பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியதால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரியவந்தது.கொலையுண்ட சண்முகத்துக்கு கடந்த 4 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்து உள்ளது. இந்த கொலையில் தொடர்பு உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்க்ள். தலையில் கல்லைப்போட்டு ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story