பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி 5 மாணவ, மாணவிகள் தற்கொலை


பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி 5 மாணவ, மாணவிகள் தற்கொலை
x

பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த 5 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை,

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இந்த தேர்வில் தோல்வி அடைந்த 4 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

ஆவடி மாணவர்

சென்னை ஆவடி கோவர்த்தனகிரி, பாரதி நகர், 1-வது தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் தேவா (வயது 17). ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய 2 பாடங்களில் தோல்வி அடைந்தார்.

இதனால் விரக்தி அடைந்த தேவா, தனது வீட்டில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல் சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையா தெருவை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி தாருண்யா (17) பிளஸ்-2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாணவி

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஓமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமணி (19). கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்ததால், இந்த ஆண்டு தனித்தேர்வராக எழுதினார். இதில் 29 மதிப்பெண்கள் எடுத்து மீண்டும் தோல்வி அடைந்தார்.

இதனால் மனமுடைந்த மாணவி ரமணி, மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மதிப்பெண் குறைந்ததால் ஏமாற்றம்

இதேபோல் வானூர் அருகே சேமமங்கலம் கிராமத்தை சேர்ந்த அருந்ததி (18), திருச்சிற்றம்பலத்தில் உள்ள காந்தி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து, பொதுத்தேர்வு எழுதினார்.

600-க்கு 500 மதிப்பெண்ணுக்கு மேல் வரும் என்று நம்பினார். நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில் அருந்ததி, 380 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்தார். மதிப்பெண் குறைந்ததால் ஏமாற்றம் அடைந்த மாணவி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தேர்வு முடிவு வெளியாகும் முன்பே...

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த நாராயண குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரி (வயது 17), தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். மாணவர் ஹரி 11-ம் வகுப்பில் 3 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை, அதற்கும் தேர்வு எழுதி இருந்தார்.

இந்தநிலையில் நேற்று தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பாக தேர்வு முடிவு குறித்த பயமும், கலக்கமும் ஏற்பட்டதால் காலை 8 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட ஹரி 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.

பெரியகுளம் மாணவி

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை, பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபஸ்ரீ மகா பிரத்திநிஷா (17).

பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், 5 பாடங்களில் தோல்வி அடைந்தது தெரியவந்தது. இதனால் அவர் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Next Story