பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x

அ.தி.மு.க. ஆட்சியின்போது கேட்டது போல், பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன், முழு செங்கரும்பும் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் நம்மையெல்லாம் ஆளாக்கிய அறிஞர் அண்ணா. அவரின் வழியில் வந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள், ஏழையின் வயிற்றில் அடிப்பது மட்டுமல்ல, ஏழைகளுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் நடுத்தெருவில் நிறுத்தி வருகிறார்கள்.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியிலும், தொடர்ந்து எனது (எடப்பாடி பழனிசாமி) தலைமையிலான அ.தி.மு.க. அரசிலும் பொங்கல் பரிசாக ரொக்கம் மற்றும் செங்கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்த விடியா தி.மு.க. அரசும், 2023-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்குவார்கள் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

இந்த நிலையில், பொங்கல் தொகுப்பு குறித்து அறிவித்த அரசு செய்திக்குறிப்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தைப் பொங்கல் என்றாலே மக்களின் நினைவிற்கு வருவது செங்கரும்புதான்.

ரூ.5 ஆயிரத்துடன், முழு செங்கரும்பு...

இந்த விடியா அரசின் அறிவிப்பில் செங்கரும்பு இடம் பெறாதது, செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் தலையில் இடி விழுந்ததுபோல் உள்ளது. பொதுமக்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விவசாயிகளும், பொதுமக்களும் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழகம் எங்கும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாக தற்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று வாய் வீரம் காட்டும் முதல்-அமைச்சர், நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, எங்களிடம் (அ.தி.மு.க. ஆட்சியில்) கேட்டபடி, இந்த அரசு தைப் பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story