வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 5 வாலிபர்கள் கைது


வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 5 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 20 Sep 2023 7:45 PM GMT (Updated: 20 Sep 2023 7:46 PM GMT)

ஓவேலி வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 5 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 வாகனங்கள் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்தனர்.

நீலகிரி

கூடலூர்

ஓவேலி வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 5 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 வாகனங்கள் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்தனர்.

வனத்துறையினர் ரோந்து

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரில் வனவர்கள் சுதீர் குமார், வீரமணி, பீட்டர் பாபு மற்றும் வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சாலையோரத்தில் சந்தேகப்படும்படி கேரள பதிவு எண் கொண்ட சொகுசு கார், ஜீப் ஆகியவை நின்று கொண்டு இருந்தது. இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்களிடம் நடத்திய விசாரணையில், அந்த வாகனங்களில் இருந்து ஆயுதங்களுடன் ஒரு கும்பல் இறங்கி வனப்பகுதிக்குள் சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வனப்பகுதிக்குள் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஒரு கும்பல் திடீரென வனத்துறையினரை தாக்க முயன்றது. இருப்பினும், வனத்துறையினர் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

வேட்டையாட முயற்சி

அதில் அவர்கள் பந்தலூர் தாலுகா பொன்னானியை சேர்ந்த ஜோபின்(வயது 28), கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியை சேர்ந்த ஜெம்சீர்(37), வழிக்கடவை சேர்ந்த ஜிஜோ(30), ஜபின் ஜான்(30), கவனூரை சேர்ந்த முகமது ஆனில்(33) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர்கள் ராதாகிருஷ்ணன், வீரமணி, சுரேஷ் ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதை ஒப்பு கொண்டனர்.

கைது

பின்னர் அவர்கள் 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 வாகனங்கள், கத்தி, டார்ச் லைட் மற்றும் வேட்டையாட பயன்படுத்தப்படும் பொருட்களை பறிமுதல் செய்தனர். இத குறித்து வனத்துறையினர் கூறும்போது, இந்த சம்பவத்தில் மேலும் சிலர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Related Tags :
Next Story