தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகை: சென்னையில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கம் - போக்குவரத்துத்துறை தகவல்


தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகை: சென்னையில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கம் - போக்குவரத்துத்துறை தகவல்
x
தினத்தந்தி 12 April 2023 7:53 AM GMT (Updated: 12 April 2023 8:25 AM GMT)

தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் பஸ் பயணம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் புனித வெள்ளி, அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால் வெளியூர் பயணம் அதிகரித்தது. சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கோடை விடுமுறை, பண்டிகை காலம், விசேஷ நாட்கள் அடுத்தடுத்து வருவதால் பஸ்களில் கூட்டம் அதிகரிக்கிறது. 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ் வருடப்பிறப்பு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து 22-ந்தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது. இதனால் வெளியூர் பயணம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாளை 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. 13-ந்தேதி (நாளை) 500 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதேபோல ரம்ஜான் பண்டிகை 22-ந்தேதி (சனிக்கிழமை) வருவதால் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை போக்குவரத்து கழகங்கள் மூலம் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story