குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 508 மனுக்கள் குவிந்தன


குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 508 மனுக்கள் குவிந்தன
x
தினத்தந்தி 7 Aug 2023 6:45 PM GMT (Updated: 7 Aug 2023 6:46 PM GMT)

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 508 மனுக்கள் குவிந்தன. முகாமில் 9 பயனாளிகளுக்கு ரூ.4¼ லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷாஅஜீத் வழங்கினார்.

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 508 மனுக்கள் குவிந்தன. முகாமில் 9 பயனாளிகளுக்கு ரூ.4¼ லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷாஅஜீத் வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 508 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

இந்த கூட்டத்தில் தொழிலாளா் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா நலவாரியத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் மதிப்பிலான திருமண உதவித்தொகைக்கான காசோலை, ஒரு பயனாளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான விபத்து மரணம் உதவித்தொகைக்கான காசோலை, 2 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இயற்கை மரணம் உதவித்தொகைகான காசோலை என மொத்தம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி, அனைத்துத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story