வீட்டின் கதவை உடைத்து 52 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் கொள்ளை


வீட்டின் கதவை உடைத்து 52 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:46 PM GMT)

குத்தாலம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 52 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

டிரைவர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ஜலில்(வயது 50). இவர், வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சைதா பானு(48) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில அவர் கணவருடன் வசித்து வருகிறார். இளைய மகள் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த இளைய மகளை சைதாபானு நேற்று அதிகாலை 3 மணிக்கு ரெயிலில் அழைத்துச்சென்று திருச்சியில் உள்ள கல்லூரியில் விட்டு விட்டு மாலை வீடு திரும்பினார்.

52 பவுன் நகைகள்-ரூ.2 லட்சம் கொள்ளை

வீட்டிற்கு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பது கண்டு சைதா பானு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்குள்ள அறைக்குள் இருந்த பீரோ கதவுகள் திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 52 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுகுறித்து சைதா பானு அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா, துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் மற்றும் தனிப்படை போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

மேலும் கொள்ளை நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story