துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரி வீட்டில் 52 பவுன் நகைகள் திருட்டு


துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரி வீட்டில் 52 பவுன் நகைகள் திருட்டு
x

திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டில் 52 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திருச்சி,

திருச்சியை அடுத்த நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்தர் (வயது 45). இவர் நவல்பட்டு அருகே உள்ள மத்திய படைக்கலன் தொழிற்சாலைகளில் ஒன்றான துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா (40). இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் நாமக்கல்லில் தங்கி படித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி பாலச்சந்தர் கேரள மாநிலம் திருச்சூருக்கு சென்றுள்ளார். ரேணுகா நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு காட்டூருக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை அவரது வீடு திறந்து கிடப்பதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் ரேணுகாவிற்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததோடு, வீட்டில் உள்ள 2 பீரோக்களும் திறந்து கிடந்தன. மேலும் பீரோக்களில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. இது பற்றி அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

52 பவுன் நகைகள் திருட்டு

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து சுமார் 52 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story