தமிழகத்தில் மேலும் 529 பேருக்கு கொரோனா பாதிப்பு - 2 பேர் உயிரிழப்பு


தமிழகத்தில் மேலும் 529 பேருக்கு கொரோனா பாதிப்பு - 2 பேர் உயிரிழப்பு
x

தமிழகத்தில் இன்று மேலும் 529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 265 ஆண்கள், 264 பெண்கள் என மொத்தம் 529 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 111 பேர், செங்கல்பட்டில் 57 பேர் உள்பட 36 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் உள்ளது. ராமநாதபுரம் மற்றும் திருப்பத்தூரில் பாதிப்பு இல்லை.

மேலும், 12 வயதுக்குட்பட்ட 32 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 103 முதியவர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 461 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 297 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story