தமிழகத்தில் 542 பேருக்கு கொரோனா: தஞ்சாவூரை சேர்ந்தவர் உயிரிழப்பு


தமிழகத்தில் 542 பேருக்கு கொரோனா: தஞ்சாவூரை சேர்ந்தவர் உயிரிழப்பு
x

தமிழகத்தில் நேற்று 542 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை,

நேற்று புதிதாக 24 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 319 பேரும், பெண்கள் 223 பேரும் உள்பட 542 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 79 பேர், கோவையில் 68 பேர் உள்பட 35 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.

தென்காசியில் பாதிப்பு இல்லை

இதில் 18 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானோர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். பெரம்பலூர், ராமநாதபுரம் மற்றும் தென்காசியில் பாதிப்பு இல்லை. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 50 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 74 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 5 ஆயிரத்து 496 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 258 பேரும், கோவையில் 538 பேரும், செங்கல்பட்டில் 331 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

ஒருவர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்தார். மற்ற மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. அந்த வகையில் 22 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் தமிழகத்தில் 398 பேர் நேற்று ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 675 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story