இடைத்தேர்தலில் போட்டியிட மேலும் 6 பேர் வேட்பு மனு


இடைத்தேர்தலில் போட்டியிட மேலும் 6 பேர் வேட்பு மனு
x

இடைத்தேர்தலில் போட்டியிட மேலும் 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவி, 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 9-ந்தேதி தற்செயல் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒன்றிய அலுவலத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட நேற்று 2 பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஏற்கனவே ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் கழுவந்தோண்டி கிராம ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட பெண் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று ஒரு பெண் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலணிக்குழி கிராம ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட நேற்று ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆண்டிமடம் ஒன்றியத்தில் இடையக்குறிச்சி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், சிலம்பூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட தலா ஒரு பெண் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் செந்துறை ஒன்றியத்தில் நாகல்குழி ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், துளார் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இன்னும் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பு மனு தாக்கல் வருகிற 27-ந்தேதியுடன் முடிவடைகிறது.


Next Story