கோவைக்கு கடத்தி வந்த 620 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

கோவைக்கு கடத்தி வந்த 620 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இடிகரை
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் மேற்பார்வையில், பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 17 வயதுடைய 2 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது போதைக்காக பயன்படுத்தும் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது.
இதனை அவர்கள் ஈரோட்டில் இருந்து கோவைக்கு கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 620 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் சிறுவர்கள் 2 பேரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.






