கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 68 ஏக்கர் நிலம் குத்தகை ரூ.12 லட்சத்துக்கு ஏலம்

கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 68 ஏக்கர் நிலம் குத்தகை ரூ.12 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கோவூரில் சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமான இந்த கோவிலுக்கு ஏராளமான நிலங்கள் உள்ளது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பல ஏக்கர் நிலங்கள் சொசைட்டி மூலம் பலருக்கு பிரித்து கொடுக்கப்பட்ட நிலையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் மீண்டும் கோவில் வசம் நிலங்கள் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான பரணிபுத்தூர் மற்றும் கோவூர் பகுதியில் உள்ள 68 ஏக்கர் நிலம் பகுதி வாரியாக பிரித்து ஏலம் விடும் பணி கோவில் வளாகத்தில் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், பரம்பரை அறங்காவலர் அனந்தபத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கோவில் நிலங்களை ஏலம் எடுப்பதற்கு ஏராளமானோர் போட்டி போட்டனர்.68 ஏக்கர் நிலம் ரூ.12 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. நிலத்தை ஏலம் எடுத்த நபர்கள் அந்த நிலத்தில் விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டியோ வாடகைக்கு எதுவும் விடக்கூடாது என்றும் அவ்வாறு விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கோவில் நிலம் ஏலம் விடப்பட்டதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் மீண்டும் அடுத்த மாதம் ஏலம் விடப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.