வட்டார கல்வி அலுவலர் தேர்வினை 695 பேர் எழுதினர்


வட்டார கல்வி அலுவலர் தேர்வினை 695 பேர் எழுதினர்
x

பெரம்பலூரில் நடந்த வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வினை 695 பேர் எழுதினர். 103 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பெரம்பலூர்

வட்டார கல்வி அலுவலர் தேர்வு

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. அதன்படி இந்த தேர்வினை எழுத இளநிலை பட்டம் மற்றும் இளநிலை கல்வியியல் பட்டம் (பி.எட்.) முடித்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 798 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கான தேர்வு பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது. முன்னதாக தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு காலை 9 மணி முதலே வந்து நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களை ஆசிரியர்கள் சோதனையிட்டு தேர்வு மையத்திற்கு உள்ளே அனுமதித்தனர். பின்னர் தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வந்த தேர்வர்களை மட்டும் தேர்வு அறைக்குள் கண்காணிப்பாளர் அனுமதித்தனர். தேர்வுக்கு பயன்படுத்த கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா தவிர செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு வர தேர்வர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

695 பேர் எழுதினர்

தேர்வு அறைக்குள் சென்ற தேர்வர்களுக்கு காலை 10 மணியளவில் ஓ.எம்.ஆர். விடைத்தாள், அறை கண்காணிப்பாளர்களால் வழங்கப்பட்டது. காலை 10 மணியளவில் கேள்வித்தாள் கொடுக்கப்பட்டு தேர்வு தொடங்கியது. 200 மதிப்பெண்ணுக்கு நடைபெற்ற தேர்வில் காலை 10.30 மணி வரை தமிழ் தகுதி தேர்வும், 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பொது அறிவு உள்ளிட்ட தேர்வும் நடைபெற்றது. பெரம்பலூரில் நடந்த தேர்வினை 695 பேர் எழுதினர். 103 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பெரம்பலூரில் நடந்த தேர்வினை தனியார் பள்ளிகளின் இயக்கக இணை இயக்குனர் ஆனந்தி, பெரம்பலூர் ஆர்.டி.ஓ. நிறைமதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெகன்நாதன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story