சென்னை விமான நிலையத்தில் ரூ.73 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.73 லட்சம் தங்கம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.73 லட்சத்து 7 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 422 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த 40 வயது பெண் மீது சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.37 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 725 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

73 லட்சம் தங்கம் பறிமுதல்

இதேபோல் இலங்கையில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த வாலிபரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.35 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள 697 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 பேரிடம் இருந்து ரூ.73 லட்சத்து 7 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 422 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கை பெண் உள்பட 2 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story