பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 76 சதவீதம் முடிந்துள்ளது


பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 76 சதவீதம் முடிந்துள்ளது
x

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 76 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ளது என்று குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சாலாமேடு காவலர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கே.கே.நகர் பகுதிகளில் தொடங்கப்பட உள்ள பாதாள சாக்கடை திட்ட பணி, பாண்டியன் நகரில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் உந்து நிலைய பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களை சேகரிக்கும் பொருட்டு 14,150 குடியிருப்புகளை இணைத்து 165.68 கீலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.263 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்காடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 76 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் 11,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரூ.268 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள்

சாலமேடு பகுதியில் ரூ.26.8 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. திண்டிவனம் நகராட்சியில் 19,230 குடியிருப்புகளை இணைத்து 165 கீலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.268 கோடி மதிப்பில் பாதாள சாக்காடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தற்போது 60 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

விழுப்புரம் நகராட்சி சாலமேடு பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் புதியதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கு பயன்படும் வகையில் நீரை வெளியேற்றுவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. நகராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ள பாதாள சாக்கடை திட்டம் மிக பயனுள்ளதாகும், இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவுற்ற பகுதிகளில் ஏற்ப்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகராட்சி பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவீன முறையிலும், அறிவியல் பூர்வமாகவும் ஏற்படுத்தி அதன் சுற்றுபுறங்களில் ஏராளமான மரக்கன்றுகளை நடுவதோடு, காற்றுமாசு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது கலெக்டர் மோகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செங்குட்டுவன், மேற்பார்வை பொறியாளர் வேல்முருகன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அன்பழகன், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர்கள் சுரேந்திரஷா, தட்சிணாமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story