வாணியம்பாடியில் 804 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்

வாணியம்பாடியில் 804 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர்.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. வாணியம்பாடி அடுத்த சின்னகல்லுபள்ளியில் உள்ள மருதர் கேசரி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நீட் தேர்வில், 864 பேர் தேர்வு எழுத இருந்த நிலையில், 60 பேர் தேர்வு எழுதவில்லை. 306 மாணவர்கள், 495 மாணவிகள், 3 மாற்றுத்திறனாளி மாணவர்கள் என மொத்தம் பேர் தேர்வு எழுதினர்.
முன்னதாக தேர்வுக்கு வந்த அனைத்து மாணவ- மாணவிகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். தேர்வு மையத்தை திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வாணியம்பாடி தாசில்தார் சம்பத், துணை தாசில்தார் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் தேவகுமார் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் தலைமையில், 5 இன்ஸ்பெக்டர்கள், 3 சப்- இன்ஸ்பெக்டர்கள், 40 போலீசார், 19 தமிழ்நாடு சிறப்பு படை காவலர்கள், 15 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.