பிரீ பயர் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!


பிரீ பயர் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!
x
தினத்தந்தி 1 Sep 2023 8:57 AM GMT (Updated: 1 Sep 2023 9:42 AM GMT)

பிரீ பயர் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவன் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த பெரிய பாலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் முன்னாள் ராணுவ வீரர் இவரது மனைவி கீதா, மகன் தாமு (வயது 14). அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். வசந்தகுமார் உயிரிழந்த நிலையில் தனது தாயுடன் வசித்து வந்தார். தாமு எந்நேரமும் செல்போன் மூலம் பிரீ பயர் கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் அவரது தாயார் தொடர்ந்து அவரை எச்சரித்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த தாமுவை தாயார் திட்டியதாக கூறப்படுகிறது. கோபித்துக் கொண்ட மாணவன் தாமு மொட்டை மாடிக்கு சென்றார். இரவு ஒரு மணி ஆகியும் மகன் வராததால் தாய் கீதா மாடிக்கு சென்று பார்த்தார்.

அங்கு பிளேடால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் தாமு இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். பின்னர், வேலூர் தாலுகா போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவன் தாமு பொதுவாக யாரிடமும் பேசாமலும், பழகாமலும் பெரும்பாலான நேரம் தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் நன்றாக படிக்கக் கூடியவராகவும் இருந்துள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் மாணவன் உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story