9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்


9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 22 Oct 2023 1:25 AM GMT (Updated: 22 Oct 2023 3:29 AM GMT)

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டிற்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த பருவமழையின் மூலமே தமிழ்நாடு அதிக அளவில் மழையை பெரும். இந்நிலையில் தென் மேற்கு பருவமழை முற்றிலுமாக முடிவடைந்து வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்நிலையில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் 23-ம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று வலுவடைந்தது.

இந்நிலையில் வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story