ரேஷன் அட்டைதாரர்களுக்கு 9 லட்சம் வேட்டி, சேலைகள்


ரேஷன் அட்டைதாரர்களுக்கு 9 லட்சம் வேட்டி, சேலைகள்
x

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 9 லட்சம் வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர்

கலெக்டர் ஆய்வு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்திற்கு சுமார் 4,42,000 வேட்டிகளும், 4,42,000 சேலைகளும் வழங்கப்பட உள்ளது.

இதற்காக ஈரோட்டில் இருந்து வேட்டி, சேலைகள் வரவழைக்கப்பட்டு வேலூரை அடுத்த மேல்மொணவூரில் உள்ள கோ- ஆப்டெக்ஸ் குடோனில் வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்திற்கு தேவையான வேட்டி, சேலைகள் மாவட்டத்தில் உள்ள 3 குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது. அவை சரிபார்க்கப்பட்டு தரமானவை பொதுமக்களுக்கு வழங்கப்படும். சேதமடைந்தவைகள் தனியாக எடுத்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் வேட்டி, சேலைகள் அந்தந்த தாலுகாவுக்கு உட்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் வினியோகிக்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வழங்குவது தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் முதியவர்கள் என 60 ஆயிரம் பேருக்கும் வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இங்கிருந்து வேட்டி, சேலைகள் அனுப்பப்படும்.

குடியிருப்புகள்

வள்ளிமலை பள்ளி வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள மணல் குறித்து புகார் வந்தது. அது தொடர்பாக தாசில்தாரிடம் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. யார் அங்கு மணல் கொட்டினர் என்பது குறித்து கண்டறியப்பட்டு அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொரோனாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்..

இதைத்தொடர்ந்து மேல்மொணவூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், குடியிருப்புகள் பல தொகுப்புகளாக கட்டப்பட்டு வருகிறது. இந்தப்பணி மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். கட்டப்படும் வீடுகளில் குளியலறை, கழிவறை தனித்தனியாக கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து அரசிடம் ஒப்படைக்கப்பட்டு மார்ச் மாத தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.


Next Story