தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற 9 பேர் குழு


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற 9 பேர் குழு
x

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கழிவுகளை அகற்ற 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் நடந்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்த நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், ஸ்டெர்லைட் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றவும், ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவது ஆகியவற்றுக்கு அனுமதி அளித்தது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிக்கையை தயாரித்து அரசுக்கு அனுப்பினார். அதனை தமிழக அரசு சார்பில் அபிடவிட்டாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றுவது, ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள உதவி கலெக்டர் தலைமையில் 9 பேர் கொண்ட உள்ளூர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆலை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட சிவில் கட்டுமான பாதுகாப்பு உறுதித்தன்மை ஆய்வு மேற்கொள்வது, கருவிகள், உதிரிபாகங்களை வெளியில் கொண்டு செல்வது போன்றவற்றை செயல்படுத்துவது தொடர்பாக இறுதி தீர்ப்பு வந்த பிறகே முடிவு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விளக்க கூட்டம்

இந்த அபிடவிட் குறித்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு விளக்கி கூறுவதற்கான கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்த

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், உதவி கலெக்டர் கவுரவ்குமார், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

செயல் திட்டம்

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது. அதனை மேற்கொள்வதற்கான செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் தலைமையில் 9 பேர் அடங்கிய உள்ளூர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மாவட்ட தொழிற்சாலைகள் ஆய்வாளர், தீயணைப்புத்துறை அலுவலர், ஸ்டெர்லைட் நிறுவனத்தை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 9 பேர் இடம்பெற்று உள்ளனர்.

இதற்காக ஒரு ஒப்பந்ததாரரை தேர்வு செய்து, கழிவுகளை அகற்றுவதற்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படும், எவ்வளவு நாட்கள் ஆகும் என்பது போன்ற விவரங்கள் பெறப்பட்டு கழிவுகளை அகற்ற அனுமதி அளிக்கப்படும். அதன்பிறகு ஒப்பந்ததாரர் கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்வார். இதற்கான நிதியை ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story