திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை


திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
x

திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

செங்கல்பட்டு

ஆவடி,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 60). இவருடைய மகள் தரண்யா (25). பி.காம்., பட்டதாரியான இவருக்கும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த திருவாங்கூர் கிராமத்தை சேர்ந்த தூரத்து உறவினரான அய்யப்பன் (35) என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 30 பவுன் நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது. திருவாங்கூரில் உள்ள அய்யப்பன் வீட்டில் தரண்யா வசித்து வந்தார்.

சென்னையில் உள்ள பாத்திரக்கடையில் வேலை செய்து வந்த அய்யப்பன், மாதம் ஒரு முறை திருவாங்கூர் சென்று மனைவியை பார்த்துவிட்டு வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமுல்லைவாயல் செந்தில் நகர் பிருந்தாவன் அவென்யூவில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன்-மனைவி இருவரும் வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை தரண்யா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமுல்லைவாயல் போலீசார் தரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தரண்யாவின் தந்தை மகாலிங்கம், திருமுல்லைவாயல் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் "திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டாரிடம் வரதட்சணையாக 35 பவுன் நகை பேசி அதில் 30 பவுன் நகையை திருமணத்தின்போது போட்டதாகவும், மீதி உள்ள 5 பவுன் நகையை 2 வருடம் கழித்து போடுவதாகவும் கூறியிருந்தேன். அய்யப்பன் மற்றும் அவரது சகோதரிகள் விஜயலட்சுமி, சக்திமீரா ஆகியோர் எனது மகள் தரண்யாவிடம் அந்த 5 பவுன் நகையை கேட்டு தகராறு செய்ததால்தான் அவள் தற்கொலை செய்து கொண்டாள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறி இருந்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தரண்யாவுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.


Next Story