எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 93.93 சதவீதம் பேர் தேர்ச்சி


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 93.93 சதவீதம் பேர் தேர்ச்சி
x

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 93.93 சதவீதம் பேர் தேர்ச்சி

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 93.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 11-வது இடத்தை பிடித்தது. தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் கடந்த ஆண்டு 29-வது இடத்தில் இருந்த திருப்பூர் மாவட்டம் இந்த ஆண்டு 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

93.93 சதவீதம் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை கலெக்டர் வினீத் வெளியிட, முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி பெற்றுக்கொண்டார். மாவட்டத்தில் 150 அரசு பள்ளிகள், 10 நகராட்சி பள்ளிகள், 21 அரசு உதவி பெறும் பள்ளிகள், 18 சுயநிதிப்பள்ளிகள், 2 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், 153 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 354 பள்ளிகள் உள்ளன.

இதில் 15 ஆயிரத்து 67 மாணவர்கள், 15 ஆயிரத்து 85 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 152 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 13 ஆயிரத்து 785 மாணவர்கள், 14 ஆயிரத்து 538 மாணவிகள் என மொத்தம் 28 ஆயிரத்து 323 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 91.49 சதவீதமும், மாணவிகள் 96.37 சதவீதமும் என மொத்தம் 93.93 சதவீதம் பெற்று மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் மாவட்டம் 11-வது இடத்தை பிடித்தது.

11-வது இடத்துக்கு முன்னேறியது

கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் 29 ஆயிரத்து631 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 26 ஆயிரத்து 212 பேர் தேர்ச்சி பெற்றனர். 88.46 சதவீதம் பெற்று மாநில அளவில் 29-வது இடத்துக்கு சரிந்தது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கை காரணமாக 29-வது இடத்தில் இருந்து இந்த ஆண்டு 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

150 அரசு பள்ளிகளில் 13 ஆயிரத்து 62 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 11 ஆயிரத்து 857 பேர் தேர்ச்சி பெற்று 90.77 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 80.26 சதவீதமே பெற்றிருந்தனர். இதுபோல் 10 நகராட்சி பள்ளிகளில் 2 ஆயிரத்து 429 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 2,185 பேர் தேர்ச்சி பெற்று 89.95 சதவீதம் பெற்றனர். கடந்த ஆண்டு 81.62 சதவீதமே பெற்றிருந்தனர். 21 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 ஆயிரத்து 602 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 3 ஆயிரத்து 349 பேர் தேர்ச்சி பெற்று 92.98 சதவீதம் பெற்றனர். கடந்த ஆண்டு 88.02 சதவீதமே பெற்றனர். 18 சுயநிதி பள்ளிகளில் 788 பேர் தேர்வு எழுதியதில் 779 பேர் தேர்ச்சியடைந்து 98.86 சதவீதம் பெற்றனர். கடந்த ஆண்டு 97.96 சதவீதம் பெற்றனர்.

மெட்ரிக் பள்ளி சதவீதம் குறைந்தது

2 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 43 பேர் தேர்வு எழுதி 39 பேர் தேர்ச்சி பெற்று 90.70 சதவீதம் பெற்றனர். கடந்த ஆண்டு 83.33 சதவீதமே பெற்றனர். 153 மெட்ரிக் பள்ளிகளில் 10 ஆயிரத்து 288 பேர் தேர்வு எழுதியதில் 10 ஆயிரத்து 114 பேர் தேர்ச்சி பெற்று 98.89 சதவீதம் அடைந்தனர். கடந்த ஆண்டு 99.07 சதவீதம் பெற்று இருந்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மெட்ரிக் பள்ளிகளை தவிர்த்து மற்ற பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. மெட்ரிக் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. இந்த ஆண்டும், மாணவர்களை விட மாணவிகளே 96.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று முன்னிலை பெற்றனர்.



Next Story