பேரம்பாக்கம் அருகே வீட்டு வேலை செய்யக்கூறி தாய் வற்புறுத்தியதால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பேரம்பாக்கம் அருகே வீட்டு வேலை செய்யக்கூறி தாய் வற்புறுத்தியதால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 Aug 2023 1:00 PM GMT (Updated: 8 Aug 2023 1:00 PM GMT)

பேரம்பாக்கம் அருகே அடிக்கடி வீட்டு வேலை செய்யக்கூறி தாய் வற்புறுத்தியதால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

திருவள்ளூர்

10-ம் வகுப்பு மாணவி

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமம் புதிய காலனியை சேர்ந்தவர் சபாபதி (வயது 42). இவர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கவியரசி என்ற மனைவியும், ராகேஷ் (16), சஞ்சித் (12) என்ற மகன்களும், தர்ஷினிதா (15) என்ற மகளும் உள்ளனர். கவியரசி அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

பண்ணூரில் உள்ள பள்ளியில் ராகேஷ் 12-ம் வகுப்பும், சஞ்சித் 7-ம் வகுப்பும், தர்ஷினிதா 10-ம் வகுப்பும் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதியன்று சபாபதி வேலையின் காரணமாக வீட்டிற்கு செல்லாமல் அலுவலகத்திலேயே தங்கினார். 5-ம் தேதியன்று காலை கவியரசி, நாளை வீட்டில் கூழ் ஊற்ற வேண்டும். எனவே மாலை பள்ளி முடிந்து வந்தவுடன் வீட்டை சுத்தம் செய்து வைக்க வேண்டும் என்று தர்ஷினிதாவிடம் கூறி விட்டு வேலைக்கு சென்றார்.

தூக்கிட்டு தற்கொலை

மேலும் நண்பர்களோடு வெளியே சென்று விளையாட கூடாது என கண்டித்து சென்றார். மாலையில் பள்ளி முடிந்து திரும்பிய 3 பேரும் வீட்டை சுத்தம் செய்ய முயன்றனர். அப்போது தர்ஷினிதா தனது சகோதரர்களிடம் தான் வீட்டை சுத்தம் செய்வதாகவும் நீங்கள் 2 பேரும் விளையாட செல்லுமாறு கூறினார். இதை தொடர்ந்து சகோதரர்கள் 2 பேரும் நண்பர்களுடன் விளையாடுவதற்காக சென்றனர்.

இதையடுத்து தாய் அடிக்கடி வீட்டு வேலை செய்ய வற்புறுத்துவதால் மன விரக்தியில் இருந்து வந்த தர்ஷினிதா, வீட்டு கதவை உள்பக்கமாக பூட்டினார். சிறிது நேரத்தில் அவர் படுக்கை அறைக்குச் சென்று அங்கு மின்விசிறியில் இருந்த கொக்கியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் விளையாடிவிட்டு வந்த சகோதரர்கள் வீட்டு கதவை திறக்க முயன்றனர். ஆனால் பூட்டி இருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது தர்ஷினிதா தூக்குப் போட்டுக் கொண்டதை கண்டு கதறி அழுது கூச்சலிட்டனர்.

போலீசார் விசாரணை

இதை கண்ட அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஓடி வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று தர்ஷினிதா உடலை மீட்டனர். நடந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பப்பி, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாணவியின் சாவு குறித்து விசாரித்து வருகிறார்கள். வீட்டு வேலை செய்யக்கூறி தாய் அடிக்கடி வற்புறுத்தியதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுப்பட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story