மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய 17 வயது மணமகள்


மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய 17 வயது மணமகள்
x

முத்துப்பேட்டை அருகே மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் 17 வயது மணமகள் திருமணத்தை நிறுத்தினார். பின்னர் சிறுமியை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை,:

முத்துப்பேட்டை அருகே மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் 17 வயது மணமகள் திருமணத்தை நிறுத்தினார். பின்னர் சிறுமியை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

நிச்சயதார்த்தம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவருக்கும், இவரது உறவினரின் மகளான 17 வயது சிறுமிக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இவர்களுக்கு நேற்று பாண்டி கடை தெருவில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

திருமணத்தை நிறுத்திய மணமகள்

அதன்படி காலை 6.30 மணிக்கு மணமேடைக்கு மணமக்கள் இருவரும் வந்திருந்தனர். புரோகிதர் மந்திரங்கள் ஓதி தாலியை மணமகனிடம் எடுத்துக் கொடுத்தார்.

மணமகனும் தாலியை பெற்றுக் கொண்டு மணமகளான சிறுமி கழுத்தில் கட்ட தயாரானார். அப்போது மணப்பெண் தாலி கட்டுவதை தடுத்து நிறுத்தினார். இதனால் மணமகன் அதிர்ச்சி அடைந்தார். இதன்காரணமாக மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

செல்போனில் புகார்

அப்பொழுது மணமகள் தான் வைத்திருந்த செல்போன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு எனக்கு இன்னும் திருமண வயது எட்டாத நிலையில் எனது பெற்றோர் தனக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பதாக புகார் தெரிவித்தார். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சிறுமி காப்பகத்தில் ஒப்படைப்பு

இதை தொடர்ந்து திருமண மண்டபத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி மற்றும் போலீசார் சென்று திருணமத்தை தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு அங்கு வந்த குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story