முட்புதரில் பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தை


முட்புதரில் பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தை
x
தினத்தந்தி 21 Sep 2023 11:00 PM GMT (Updated: 21 Sep 2023 11:00 PM GMT)

கோவை கோவில்பாளையம் அருகே முட்புதரில் பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

கோவை கோவில்பாளையம் அருகே முட்புதரில் பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

பச்சிளம் குழந்தை பிணம்

கோவை கோவில்பாளையத்தில் இருந்து கருவலூர் செல்லும் சாலையில் கவுசிகா நதி செல்கிறது. இந்த நதிக்கரையில் உள்ள முட்புதரில் ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் பார்த்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு ஆய்வு செய்தனர்.

இதில் அந்த குழந்தை பிறந்து 2 நாட்களே இருக்கும் என்பதும், குழந்தையின் உடலில் எறும்பு கடித்த காயம் மட்டும் இருந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து குழந்தையின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

தொடர்ந்து இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி சென்றது யார்? கள்ளக்காதலில் பிறந்ததால் உயிருடன் வீசிச் சென்றனரா? அல்லது குழந்தை இறந்து பிறந்ததால் வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story