காட்டாற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட கோரிக்கை


காட்டாற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட கோரிக்கை
x

காட்டாற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி

லால்குடி:

காட்டாறு

லால்குடி அருகே உள்ள ரெட்டிமாங்குடி கிராமத்தில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளர்களே அதிக அளவில் வசித்து வருகின்றனர். வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் மானாவாரி பயிர்களே பயிரிடப்பட்டு வருகின்றன.

கிராமத்தின் வடக்கு பகுதியில் காட்டாறு ஓடுகிறது. பாடாலூர், நெய்குளம், பி.கே.அகரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் ரெட்டிமாங்குடி காட்டாற்று வழியாக வந்து மாங்குடி, குலக்குடி, கன்னாக்குடி, இருதயபுரம் சென்று கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. மழைக்காலங்களில் மட்டுமே இந்த ஆற்றில் தண்ணீர் ஓடும். ரெட்டிமாங்குடியில் இருந்து பி.கே. அகரத்திற்கும், பெருவளப்பூர் கிராமத்திற்கும் காட்டாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். இந்த கிராமங்களுக்கு செல்வதற்காக காட்டாற்றின் குறுக்கே தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

தடுப்பணை

மழைக்காலங்களில் காட்டாற்றில் வெள்ளம் அதிக அளவில் வந்து வீணாக கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. இதனால் கோடை காலங்களில் ரெட்டிமாங்குடி, பெருவளப்பூர், பி.கே.அகரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. எனவே இப்பகுதிகளில் உள்ள காட்டாற்றை தூர்வாரி தடுப்பணை அமைத்து மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story