அழுகிய நிலையில் பிணமாக கிடந்த குளித்தலை வியாபாரி


அழுகிய நிலையில் பிணமாக கிடந்த குளித்தலை வியாபாரி
x

அழுகிய நிலையில் குளித்தலை வியாபாரி பிணமாக கிடந்தார்.

திருச்சி

காரில் பிணம்

திருச்சி கோணக்கரை பகுதியில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக ஒரு கார் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் காருக்குள் பார்த்தபோது, காருக்குள் ஆண் ஒருவர் படுத்து இருந்தார். ஏ.சி. ஓடிக்கொண்டு இருந்தது.

அவர்கள் காரின் கதவை தட்டியும் அதில் படுத்து இருந்தவர் எழுந்திருக்கவில்லை. இதுபற்றி அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரின் கதவை உடைத்து பார்த்தனர்.

வியாபாரி

அப்போது, காருக்குள் இருந்தவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது. காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்ததில் அவர் கரூர் மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டி விதைப்பண்ணை ரோட்டை சேர்ந்த வியாபாரி ஆடலரசு (வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அவர் தனது மனைவி, 2 வயது மகளை தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு கடந்த 31-ந்தேதி காலை 7 மணிக்கு குளித்தலைக்கு புறப்பட்டுள்ளார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு செல்லவில்லை. அவரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி குளித்தலை போலீசில் தனது கணவரை காணவில்லை என்று புகார் அளித்திருந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

அவர் காரை ஓட்டி வந்தபோது உடல்நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story