கோத்தகிரியில் குட்டிகளை முதுகில் சுமந்தவாறு வலம் வரும் கரடி..!


கோத்தகிரியில் குட்டிகளை முதுகில் சுமந்தவாறு வலம் வரும் கரடி..!
x

கோத்தகிரியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள கன்னிகா தேவி காலனி பகுதியில் கரடிகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் கரடி ஒன்று சிக்கியது. அந்த கரடி தலைகுந்தா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. அதே மாத இறுதியில் இதே பகுதியில் உள்ள ஓடைக்கு அருகே மற்றொரு கரடி இறந்து கிடந்தது. இருப்பினும் அப்பகுதியில் கரடிகள் நடமாட்டம் இன்னும் குறையவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கன்னிகா தேவி காலனி குடியிருப்பு பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேயிலைத் தோட்டத்தை ஒட்டிச் செல்லும் நடைபாதையில் 2 குட்டிகளை தனது முதுகில் சுமந்தவாறு கரடி ஒன்று உலா வந்த வண்ணம் உள்ளது. இதனால் அங்கு தேயிலைப் பறிக்கும் தொழிலாளர்களும், கிராம மக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் குட்டிகளுடன் கரடி ஒன்று உலா வந்த வண்ணம் உள்ளது. மனிதர்களால் தனது குட்டிகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் தாய்க்கரடி பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளதால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story