2 குட்டிகளுடன் உலா வந்த கரடியால் பரபரப்பு


2 குட்டிகளுடன் உலா வந்த கரடியால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Jun 2023 10:00 PM GMT (Updated: 20 Jun 2023 10:00 PM GMT)

கோத்தகிரி அருகே 2 குட்டிகளுடன் உலா வந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே கன்னிகா தேவி காலனி பகுதியில் கரடிகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் கரடி சிக்கியது. அந்த கரடி தலைகுந்தா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இருப்பினும் கரடிகள் நடமாட்டம் இப்பகுதியில் குறையவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் கன்னிகா தேவி காலனி குடியிருப்பு பகுதி, தேயிலை தோட்டத்தை ஒட்டி செல்லும் நடைபாதையில் 2 குட்டிகளுடன் கரடி நடமாடியது. அப்போது அங்கிருந்த நாய் கரடிகளை துரத்தியது. இதனால் அச்சமடைந்த 2 குட்டிகளும் தாய் கரடியின் முதுகில் ஏறின. குட்டிகளை முதுகில் சுமந்தவாறு கரடி நடைபாதை வழியாக சற்று தூரம் நடந்து சென்று, அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. இதனால் பச்சை தேயிலை பறித்த தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த காட்சியை அங்கிருந்த வாலிபர்கள் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எனவே, குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story