புத்தகம், அறிவை கூர்மையாக்க பயன்படும் ஆயுதம்


புத்தகம், அறிவை கூர்மையாக்க பயன்படும் ஆயுதம்
x
தினத்தந்தி 17 Nov 2022 6:45 PM GMT (Updated: 17 Nov 2022 6:46 PM GMT)

புத்தகம், அறிவை கூர்மையாக்க பயன்படும் ஆயுதம் என்று நூலக வார விழாவில் நீதிபதி பேசினார்.

நீலகிரி

ஊட்டி

புத்தகம், அறிவை கூர்மையாக்க பயன்படும் ஆயுதம் என்று நூலக வார விழாவில் நீதிபதி பேசினார்.

நூலக வார விழா

நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் 55 வது தேசிய நூலக வார விழா கடந்த 3 நாட்களாக நடைபெறுகிறது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று சி.எஸ்.ஐ.சி.எம்.எம். பள்ளி வளாகத்தில் 'கதை சொல்லி' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாவட்ட மைய நூலகர் ரவி வரவேற்றார். நூலக வாசகர் வட்ட தலைவர் கவிதாயினி, அமுதவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை எஸ்தர் வசந்தி தலைமை தாங்கினார். இதையடுத்து ஆவணப்பட நிறுவனர் மதிமாறன் கதைகளை எப்படி சொல்வது என்று மாணவ-மணவிகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது நீலகிரி மாவட்ட பழங்குடியினர் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை கதைகளாக கூறினார். இதன் பின்னர் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களை சிறு, சிறு கதைகளாக பகிர்ந்து கொண்டனர்.

பொது அறிவு வளரும்

இதைத்தொடர்ந்து மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதி ஆர்.ஸ்ரீதரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

மாணவர்கள் பள்ளி படிப்பை தவிர கதைகள் சொல்வது, புத்தகம் வாசிப்பது, நூலகம் செல்வதை கடமையாக கொள்ள வேண்டும். இதன் மூலம் பாடப்புத்தக அறிவை தாண்டி பொது அறிவு வளரும். இது எதிர்காலத்தில் அவர்களுக்கு வாழ்க்கையை சரி செய்ய உதவும். அறிவை கூர்மையாக்க பயன்படும் ஆயுதம் புத்தகங்கள் ஆகும்.

மாணவர்களிடத்தில் கதை சொல்லும் நிகழ்வானது தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். இப்படிப்பட்ட கதைகள் மூலமாகத்தான் சிறந்த சிந்தனையாளர்களை நாம் அடைய முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வாசகர் வட்டத்தில் துணைத்தலைவர் சுரேஷ் ரமணா, உறுப்பினர் நாகராஜ் கவிஞர் ஜே.பி. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story