திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி; 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை
ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்வதற்கு முக்கிய சாலையாக இருப்பது சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை. அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் இந்த மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழ்நாடு, கர்நாடகாவை சேர்ந்த பஸ், லாரி, கார், வேன், இருசக்கர வாகனங்கள் இந்த மலைப்பாதையில் சென்று வந்தபடி இருக்கும்.
இந்தநிலையில் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் அடிக்கடி பழுதாகி நின்று விடுகின்றன. அதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு என்பது தீராத பிரச்சினையாக உள்ளது.
பழுதாகி நின்றது
இந்தநிலையில் நேற்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து கோவைக்கு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. காலை 6 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 12-வது கொண்டை ஊசி வளைவில் லாரி சென்றபோது திரும்ப முடியாமல் பழுதாகி அப்படியே நின்றுவிட்டது.
இதனால் அந்த வழியாக பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. சிறிய வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன. அதன்பின்னர் காலை 10 மணி அளவில் பண்ணாரியில் இருந்து மெக்கானிக் ஒருவர் வரவழைக்கப்பட்டார். அவர் வந்து பழுதை சரிெசய்த பின்னரே லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் திம்பம் மலைப்பாதையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






