மாங்காடு அருகே தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்த கார்


மாங்காடு அருகே தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்த கார்
x

மாங்காடு அருகே சாலையில் கார் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்ததில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

காஞ்சிபுரம்

தலைகுப்புற கவிழ்ந்த கார்

அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் கார்டன் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 29), அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டில் உள்ள சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்தார். இவரது நண்பர்கள் வியாசர்பாடியை சேர்ந்த ஜான்சன் (26), சுரேந்தர் (30), இவர்களும் சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று 3 பேரும் காரில் கிழக்கு கடற்கரை சாலைக்கு சென்று விட்டு மீண்டும் அம்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை பிரசாந்த் ஓட்டினார்.

இவா்கள் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது வழிமாறி வந்ததால் மீண்டும் வண்டலூர் சென்று அங்கிருந்து தாம்பரம்- மதுரவாயல் நெடுஞ்சாலைக்கு செல்ல அதே சாலையில் யூ-டர்ன் எடுத்து கொண்டு வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மாங்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி உருண்டபடி தலைகீழாக கவிழ்ந்தது

வாலிபர் பலி

இதில் காரை ஓட்டி வந்த பிரசாந்த் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவரது நண்பர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இறந்துபோன பிரசாந்த் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியதில் வழி தெரியாமல் சென்றதால் மீண்டும் வண்டலூர் செல்வதற்காக அதி வேகமாக திரும்பி வந்தபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவத்தால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான காரை போலீசார் கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினார்கள்.

மற்றொரு சம்பவம்

சென்னை மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகே நேற்று காலை கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்ைட இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த மற்றொரு கார் மீது மோதி சாலையின் நடுவில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் கார் சேதம் அடைந்தது. காரில் பயணம் செய்த 2 பேர் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடினர். மேலும் கார் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த காரின் பின்பகுதியும் நொறுங்கியது.

2 பேர் காயம்

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தலைகுப்புற கிடந்த காரை திருப்பி போட்டனர். காயங்களுடன் காருக்குள் இருந்த 2 பேரையும் மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சாலையோரம் நின்று கொண்டிருந்த விபத்தில் சிக்கிய காரை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய 2 கார்களிலும் பாதுகாப்பு பலூன்கள் உடனடியாக திறக்கப்பட்டதால் காரில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story