அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம்


அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம்
x

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் 100 சதவீதம் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்குவதற்காகவும், ஒரு வாக்காளரின் பெயர் ஒரே தொகுதியில் 2 இடங்களில் இடம்பெறுதலை தவிர்க்கும் வகையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியானது தற்போது தொடங்கப்பட்டு வருகிற 31.03.2023 வரை நடைபெறவுள்ளது.

வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே நேரடியாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள எண்ணுடன் NVSP Web Portal (https://www.nvsp.in) அல்லது Voter Helpline Mobile App (VHA) மூலமாக இணைத்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி வாக்காளர்கள் அந்தந்த பகுதியை சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விருப்பத்தின் அடிப்படையில் 6 பி படிவத்தினை பெற்று ஆதார் எண்களின் விவரங்களை இணைத்துக்கொள்ளலாம்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்கள் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் மூலமாகவும், தொழில்நுட்ப பிரிவு வல்லுனர்கள் மூலமாகவும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். .கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, தேர்தல் தனி தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story