அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலை சுற்றும் பாதையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போதும், சித்ரா பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் காலை 10.54 மணி அளவில் தொடங்கி நேற்று காலை 9.34 மணி அளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

2-வது நாளாக கிரிவலம்

தொடர்ந்து நேற்று காலை 9.34 மணி வரை பவுர்ணமி நீடித்ததால் நேற்று காலை 8 மணிவரை பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வரிசையில் சென்ற பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் மூலம் நிழற்பந்தல் அமைக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பினர்.

மேலும் வெயில் தாக்கத்தால் வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது. பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story