ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது..!


ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது..!
x
தினத்தந்தி 1 Dec 2023 4:02 AM GMT (Updated: 1 Dec 2023 4:14 AM GMT)

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது.

இந்தநிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 3-ந்தேதி வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என்று பெயரிடப்பட உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 900 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 800 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாகவும், அதன்பின் புயலாக மாறி தெற்கு ஆந்திரா- வட தமிழகத்தில் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 4-ம் தேதி மாலை கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புயல் காரணமாக தெற்கு ஆந்திர கடலோர பகுதி, வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடல் சீற்றத்துடன் உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story