வயலுக்கு தண்ணீர் செல்லும் குழாய் உடைந்ததால் தகராறு; தந்தை, மகனுக்கு கத்தி வெட்டு


வயலுக்கு தண்ணீர் செல்லும் குழாய் உடைந்ததால் தகராறு; தந்தை, மகனுக்கு கத்தி வெட்டு
x

வயலுக்கு தண்ணீர் செல்லும் குழாய் உடைந்த தகராறில் தந்தை, மகனை கத்தியால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

தகராறு

ஆந்திர மாநிலம் நகரி அடுத்த சின்ன தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் தேசப்பன் (வயது 58). இவரது அண்ணன் முனிரத்தினம் (62). இவர்கள் இருவருக்கும் சொந்தமான நிலம் பள்ளிப்பட்டு தாலுகா கேசவராஜ குப்பம் ஊராட்சியை சேர்ந்த டி.டி. கண்டிகை கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்திற்கு உள்ள தண்ணீர் குழாய் உடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அண்ணன் தம்பிகள் இடையே தண்ணீர் குழாயை யார் உடைத்தது என்பதில் தகராறு ஏற்பட்டது. அப்போது தேசப்பனுக்கு ஆதரவாக அவரது மகன் வேலு (22) என்பவரும், முனிரத்தினத்திற்கு ஆதரவாக அவரது மகன் சோமசுந்தரம் (38) ஆகியோர் இந்த தகராறில் ஈடுபட்டனர்.

கத்தி வெட்டு

அப்போது அத்திரமடைந்த முனிரத்தினம் கத்தியால் தனது தம்பி தேசப்பனையும், அவரது மகன் வேலுவையும் வெட்டினார். இதில் தேசப்பனுக்கும், அவரது மகன் வேலுவுக்கும் தலையில் வெட்டு விழுந்தது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தேசப்பன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மகன் வேலு தலையில் படுகாயம் அடைந்ததால் அவர் சிகிச்சைகாக ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் பொதட்டூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் தந்தை, மகனை வெட்டிய முனிரத்தினத்தையும் அவரது மகன் சோமசுந்தரத்தையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story