ஆலடிக்குமுளை ஊராட்சியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டது


தினத்தந்தி 10 July 2023 8:37 PM GMT (Updated: 11 July 2023 11:25 AM GMT)

தினத்தந்தி' செய்தி எதிரொலியாக ஆலடிக்குமுளை ஊராட்சியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டது

தஞ்சாவூர்

கரம்பயம்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக ஆலடிக்குமுளை ஊராட்சியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டது.

வடிகால் வாய்க்கால்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலடிக்குமுளை ஊராட்சியில் தெற்கு குமுளை வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் ஆலடிக்கு முளை, பாலமுத்தி ஆகிய இரண்டு ஊராட்சிகளையும் இணைக்க கூடியது.

மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஆலடிக்குமுளை தாமரைக்குளம், அய்யனார் குளம், செம்பிரன் குளம் உள்ளிட்ட குளங்களில் நீர் நிரம்பி, அந்த நீரானது தெற்கு குமுளை வடிகால் மூலமாக ஆயிரக்கணக்கான நிலங்களுக்கு பாசன வசதி பெறுகிறது.

புதர் மண்டி கிடந்தது

பின்னர் உபரி நீர் இந்த வடிகால் வாய்க்கால் மூலமாக மகாராஜாசமுத்திரம் காட்டாற்றில் சென்று கலக்கிறது இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடந்தது. இதனால் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த வாய்க்காலில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தூர்வாரப்பட்டது

இதுகுறித்து செய்தி படத்துடன் 'தினத்தந்தி' நாளிதழில் வெளிவந்தது. அதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெற்கு குமுளை வாய்க்காலில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி, தூர்வாரி ஆழப்படுத்தினர்.

இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story